ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

   ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 654 விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளன. நேற்று இரவு தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவுக்கு இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையை சேர்ந்த 4 ரோந்து கப்பல்கள் அங்கே வந்துள்ளன.
இலங்கை கடற்படையினர் கற்களையும், பாட்டில்களையும் வீசி 20 படகுகளில் இருந்த மீன்களையும், திசை காட்டும் கருவிகளையும் கொள்ளையடித்துள்ளனர். மேலும், மீன்பிடிச் சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதே போல் இன்று அதிகாலை 4 மணிக்கு கரைதிரும்பி கொண்டிரூக்கும் போது இலங்கை கடற்படையினர் மீண்டும் 100க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்து மீன்களை கொள்ளையடித்துள்ளனர்.
இவர்களில் ஜான் பிரிட்டோ, வேல் முத்து, லூகாஸ், வீரணன் ஆகியோர் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்கள் திசைமாறி சென்று விட்டார்களா அல்லது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.